
கட்சி தொடங்கிய விஜய்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இப்போது ஒப்புக் கொண்டிருக்கும் படப்பிடிப்புகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் அவர் விரைவில் முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட இருக்கிறார். அதாவது, சினிமாவை விட்டு முழுமையாக விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் அவருடைய சினிமா ரசிகர்கள் கவலைப்பட்டாலும், அரசியலுக்கு வந்துவிட்டாமல் மக்கள் பணியில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் விஜய்யின் திட்டம். கட்சி ஆரம்பித்த உடனேயே தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புகள் முடிந்தவுடன் கட்சி கொடி, கொள்கைகளை அறிவித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
எப்போது மக்களை சந்திக்க வருகிறார்?
அவர் எப்போது மக்களை சந்திக்க வருகிறார்? என்பது குறித்த தகவலை தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். கும்மிடிப்பூண்டி அருகே எருக்குவாய் ஊராட்சியில ஏழை, எளியோர் 7 பேருக்கு இலவச வீடுகள் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டது. அதனை திறந்து வைத்த தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், விரைவில் நடிகர் விஜய் தொகுதி வாரியாக பொதுமக்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
நிர்வாகிகளுக்கு அறிவுரை
அதனால், கட்சி நிர்வாகிள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்ட புஸ்ஸி ஆன்ந்த், நியாயமாக கட்சிப் பணியில் ஈடுபடுங்கள், எந்த பிரச்சினை வந்தாலும் தளபதி விஜய் பார்த்துக் கொள்வார் என வாக்குறுதி அளித்தார். மேலும், வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அவரை முதல்வராக்கும் வகையில் சிறப்பாக அனைவரும் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
வெங்கட் பிரபு படத்தில் விஜய்
நடிகர் விஜய் இப்போது வெங்கட் பிரபு படத்தில் முழுமூச்சாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தை முடித்தவுடன் இன்னொரு படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இரண்டு படங்களையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடித்துக் கொடுத்துவிட்டு முழுநேர அரசியல் பணியில் ஈடுபட இருக்கிறார். இப்போது நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால், அப்போது ஒரு மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளார் தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவர் விஜய். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



