
தமிழ் திரையுலகின் உச்ச நடிகராக இருப்பவர், விஜய். ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படும் இவர், விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இவர் கடந்த சில வருடங்களாக தனது குடும்பத்தினரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் விஜய்?
நடிகர் விஜய், கடந்த சில வருடங்களாக தான் நடிக்கும் படங்களின் மூலமாகவும், தனிப்பட்ட வகையிலும் அதீத அளவில் அரசியல் ஆர்வம் காட்டி வருகிறார். இவருக்கும் சங்கீதாவிற்கும் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
விஜய்யின் மனைவி சங்கீதா, மாஸ்டர் படம் வரை விஜய்யின் அனைத்து பட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்திருந்தார். வேறு ஏதும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் விஜய், தனது மனைவியுடன்தான் செல்வார். ஆனால், அவரை தனது மனைவியுடன் எந்த நிகழ்ச்சிகளுக்கும் தற்போது செல்வதில்லை. விஜய், தற்போது சென்னையில் தங்கியிருப்பதாகவும் அவரது மனைவி லண்டனில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மகனுக்கு கரம் நீட்டவில்லையா?
பிரபலங்களின் வாரிசுகள் திரைத்துறைக்கு வருவது சகஜம். அப்படி, விஜய்யின் மகன் சஞ்சையும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த விஷயத்தில் அவருக்கு விஜய் உதவியே செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இறுதியில், சஞ்சயின் தாய் சங்கீதாதான் உதவி செய்ததாக தகவல்கள் பரவியது.
காரணம் என்ன?
விஜய்யும் சங்கீதாவும், விவாகரத்து பெற்றுக்கொண்டதாகவும், சங்கீதா அதனால்தான் லண்டனில் செட்டில் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவலை ஒரு மூத்த பத்திரிக்கையாளர் பிரபல யூடியூப் சேனலில் பேசியுள்ளார். மேலும், இவர்களின் பிரிவிற்கு காரணம் விஜய் அரசியலுக்கு வரவிருப்பதுதான் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
விஜய்யின் மகனும் அவரது மனைவியும் அவரை அரசியலுக்கு வர வேண்டாம் என்று கூறியதாகவும் அதை மீறி விஜய் அரசியலுக்கு வந்ததுதான் இந்த பிரிவிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
விஜய் அரசியலுக்கு வருவது உறுதியா?
நடிகர் விஜய், தனது படங்களில் அரசியல் பஞ்ச் வசனங்களை பேசி, அது குறித்த காட்சிகளில் நடித்து வருகிறார். படங்களின் இசை வெளியீட்டு விழா, வெற்றி விழா, என பல பட விழாக்களில் ரசிகர்களை கவரும் வகையில் டைலாக் பேசி வருகிறார். அது மட்டுமன்றி, மக்களுக்கும் அவ்வப்போது உதவிகள் செய்து வருகிறார். சமீபத்தில் கூட, தென் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவிகளை வழங்கினார். ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் அவரது ரசிகர்களும் பல வேலைகளை செய்து வருகின்றனர். இதனால், விஜய் அரசியலுக்கு வருவதாக கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.



