
தமிழ் திரையுலகின் டாப் இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், லோகேஷ் கனகராஜ். வெகு சில படங்களே இயக்கியிருந்தாலும் அனைத்தையும் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆக்கியுள்ளதால், இவருக்கு நடிகர் ரஜினிகாந்தை வைத்து படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 73 வயதாகும் ரஜினிகாந்த், வேட்டையன் படத்தில் நடித்து முடித்த பிறகு, தனது 171வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
தலைவர் 171 படத்தின் டைட்டில்:
தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகியிருந்த லோகேஷ் கனகராஜ், தலைவர் படத்திற்காக கதை எழுதும் பணியில் இருப்பதாக தெரிவித்திருந்தார். லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்ற இவர், கடந்த சில நாட்களாக கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், அப்படத்தின் முதல் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இதில், நடிகர் ரஜினிகாந்த் இரு கைகளிலும் கைகடிகாரத்தால் ஆன விலங்கை கட்டியிருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அந்த கடிகாரங்கள் தங்க நிறத்தில் இருந்தன. இதை பார்த்த ரசிகர்கள் படத்தின் பெயர் ‘தங்கம்’ அல்லது ‘ராணா’ என்று கணித்திருந்தனர்.
தற்போது, அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்திற்கு ‘கூலி’ என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இறுதியில் இப்படத்தின் பெயர் தங்கமும் இல்லை, ராணாவும் இல்லை என்பது ஊர்ஜிதம் ஆகியிருக்கிறது.
ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன?
தலைவர் 171 படத்திற்கு, கூலி என பெயரிடப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பிடித்திருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது. அனிருத், எப்போதும் போல இசையில் மாஸ் காட்டியிருப்பதாகவும், அவர் தங்களை ஏமாற்றவில்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அது மட்டுமன்றி, லோகேஷ் கனகராஜ் தனது சிக்னேச்சர் ஸ்டைலில் ரத்தம், சண்டை, மாஸ் டைலாக் ஆகியவற்றை இணைத்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் பயங்கர குஷியில் இருக்கின்றனர்.
ஷூட்டிங் எப்போது?
நடிகர் ரஜினிகாந்த், தற்போது வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். கன்னியாகுமரி மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடைப்பெற்றது. இப்படத்தை டி.ஜே. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிந்தவுடன் தலைவர் 171 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினி காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த படத்தில் போலிஸாக நடிக்கும் இவர், இந்த படத்தில் கடத்தல் மன்னனாக நடிப்பதை பார்த்து, ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.
ஏற்கனவே பேசிய டைலாக்:
கூலி படத்தின் டைட்டில் டீசர் வீடியோவில் ரஜினி “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்” என்று ஒரு மாஸ் டைலாக்கை பேசியிருக்கிறார். இது, அவர் ஏற்கனவே தான் நடித்த ரங்கா படத்தில் பேசிய டைலாக் என தெரிய வந்த்ள்ளது. இந்த படம், 1982ஆம் ஆண்டு வெளியானது. தற்போது சுமார் 32 வருடங்களுக்கு பிறகு, ரஜினி இந்த டைலாக்கை மீண்டும் பேசியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் சிலிர்த்து போய் சில்லறையை சிதற விட்டு வருகின்றனர்.



