பெற்றோர்களின் ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் குழந்தைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகமெங்கும் ஸ்மார்ட் போன் செயல்பாடு அதிகரித்து வருகிறது. அதை அறிவுப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துவதை விடுத்து தேவையற்றவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக பெற்றோர்களின் ‘ஸ்மார்ட் போன்’ செயல்பாட்டினால் குழந்தைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. அமெரிக்காவின் இல்லினாய்வ் மாகாண பல்கலைக் கழகம், மிக்சிகன் பல்கலைக் கழகங்களை சேர்ந்த நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பொதுவாக சில பெற்றோர்கள் நாள் ஒன்றுக்கு 9 மணி நேரத்தை டெலிவிஷன், கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன்களில் செலவிடுகின்றனர். அவற்றை குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடும் நேரம், விளையாடும் நேரம், மற்றும் தூங்கும் நேரங்களிலும் பயன்படுத்துகின்றனர்.
அதை பார்க்கும் குழந்தைகள் தாங்களும் பெற்றோரின் நடவடிக்கைகளை பின்பற்றுகின்றனர். படிப்பிலும், வேறு சில அறிவுப்பூர்வமான செயல்பாட்டிலும் ஈடுபடாமல் ஸ்மார்ட் போன்கள், டெலிவிஷன்கள் மற்றும் கம்ப்யூட்டரில் நேரங்களை செலவிடுகின்றனர்.
இதனால் குழந்தைகளின் படிப்பும், உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. எனவே பெற்றோர்கள் குடும்ப நலனுக்கு செலவிடும் நேரங்களை பயனுள்ளதாக்கி கொள்ள வேண்டும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி பழக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வு 172 குடும்பத்தினரிடம் நடத்தப்பட்டது. அதில் பெற்றோருடன் 5 வயது மற்றும் அதற்கு குறைந்த வயது குழந்தைகள் பங்கேற்றனர். #SmartPhones
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்