Sashti Viratham Tamil | முருகப்பெருமானுக்கு சஷ்டி நாளில் விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் சஷ்டி விரதம் இருந்தால், வெகு சீக்கிரமே தாய்மை வரம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் கடன், தொழில் பிரச்சனை இருப்பவர்களும் சஷ்டி விரதம் இருக்கலாம்.
ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழாவுக்கு முன்பாக இருக்கும் 7 நாள் விரதமே மிகவும் சக்தி வாய்ந்தது. மாதந்தோறும் வரும் வளர்பிறை, தேய்பிறை சஷ்டி விரதமும் இருக்கலாம். இந்த ஆண்டு ஐப்பசி மாதம சஷ்டி விரதம் நவம்பர் 2 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கியது. நவம்பர் 8 ஆம் தேதி முருகப்பெருமான் திருக்கல்யாண வைபத்துடன் முடிவுக்கு வருகிறது. ஒரு சிலர் சூரசம்ஹாரம் நிறைவு பெற்றவுடன் சஷ்டி விரதத்தை முடித்துக் கொள்பவர்களும் இருக்கின்றனர். ஆனால், முறையாக சஷ்டி விரதத்தை எப்படி முடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கந்த சஷ்டி விரதம்
கந்த சஷ்டி விரதம் வருடத்துக்கு ஒருமுறை ஐப்பசி மாதம் கடைபிடிக்கப்படுகிறது. ஐப்பசியில் வரும் வளர்பிறை சஷ்டி தினத்தில் சூரசம்ஹாரம் நடந்து, அதற்கு அடுத்த நாள் முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபம் நடந்து முடிந்த பிறகு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். கந்தசஷ்டி சூரசம்ஹாரத்துக்கு 6 நாட்கள் முன்னதாக சஷ்டி விரதம் தொடங்கும். முருகப்பெருமானின் படம் மலர் மாலைகளால் அலங்கரிப்பட்டு பால், பழம் வைத்து விரதம் தொடங்குவது வழக்கம்.
தினம்தோறும் காலை மாலை சஷ்டி கவசம் படித்து முருகனை வழிபட வேண்டும். முடிந்தால் அருகில் உள்ள முருகர் கோவிலுக்கும் சென்று வரலாம். உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப மிளகு விரதம், பால் விரதம், பால் பழம் விரதம் இருக்கலாம். இரண்டு வேளைகள் சாப்பிடாதவர்கள் இருப்பார்கள். சிலர் மூன்று வேளைகளும் சாப்பிடாமல் இருப்பவர்களும் இருக்கின்றனர். அவரவர் உடல்நிலையை பொறுத்தது. ஆனால், இந்த விரதத்தின்போது மனமுருகி வேண்டினால் நிச்சயம் நினைத்த காரியம் நடக்கும்.
கந்த சஷ்டி விரதம் முடிக்கும் முறை
5 நாட்கள் விரதம் இருந்த பின்னர் 6வது நாளிலும் காலை எழுந்து முருகப்பெருமானின் திருவுருவ புகைப்படத்தை அலங்காரம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். முருகனின் திருவுருப்படத்துக்கு முன்பாக சர்க்கோண கோலம் வரைந்து 6 தீப விளக்குகள் ஏற்றவும். அதன்பின்னர் சகந்தசஷ்டி கவசம் படித்துவிட்டு, குழந்தை வரம் கொடுக்க வேண்டும் என அவரிடம் மனமுருகி தம்பதிகள் வேண்டுதலை வைக்க வேண்டும். மற்ற விஷயங்களுக்காக விரதம் இருப்பவர்களும் தங்கள் காரியம் நடக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அருகில் இருக்கும் முருகர் கோவிலுக்கு சென்று சூரசம்ஹாரம் நடக்கும் முன்னர் முருகப்பெருமானை தரிசித்துவிட்டு, சூரசம்ஹாரம் நடந்த உடன் வீட்டுக்கு வந்து குளித்து மீண்டும் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் திருக்கல்யாண வைபத்தில் கலந்து கொண்ட பிறகு பால் பழம் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
மாந்தாந்திர சஷ்டி விரதம் இருக்கும் முறை
மாதாந்திர சஷ்டி விரதம் இருப்பவர்களும் காலையில் எழுந்து குளித்துவிட்டு முருகப்பெருமானின் திருவுருவப் படத்தை அலங்கரித்து பூஜை செய்ய வேண்டும். காலையில் இருந்து விரதம் இருந்துவிட்டு மாலை அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வந்தபிறகு சஷ்டி விரதத்தை முடித்துக் கொள்ளலாம். தொடர்ச்சியான சஷ்டி விரதம் நிச்சயம் நல்ல பலன்களை கொடுக்கும்.



