கனவுகளுக்கான பலன்கள் Kanavu Palangal in Tamil சுப சொப்பனங்கள் பசு, எருது, யானை தேவாலயங்கள, அரண்மனை, மலைஉச்சி, விருக்ஷம் இவைகளின் மேல் ஏறுதல், மாமிச பக்ஷணம், தயிரன்னம் புசித்தல் வெள்ளை வஸ்த்திரம் தரித்தல்?
ரத்தின ஆபரணங்கள் காணல், சந்தனம் பூசிக்கொள்ளல், வெற்றிலை பாக்கு தரித்தல், கற்பூரம், அகில், வெள்ளை புஷ்பம் இவைகளை கண்டால் சொற்ப சம்பத்து உண்டாகும்.
கனவு என்பது என்ன?
எங்களின் நினைவுகள்தான் தூக்கத்தில் கனவுகளாக வருவதாக உளவியல் ஆராட்சியாளர்கள் கூறுகின்றார்கள். இள வயதினர்க்கு காதல் கனவுகளே அதிகமாக வருமாம். சினிமா பார்த்துவிட்டு வந்து தூங்கினால் கனவில் அந்தப் படத்தின் கதாநாயகனோ, அல்லது கதாநாயகியோ கனவில் தோன்றுவார்களாம். அவரவர்களின் நினைவுகளே கனவுகள். (விக்கிபீடியா)
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தனது நறுக்குகள் ஒன்றில் சொல்லுகின்றார் “உன் கனவில் பாம்பு துரத்துகின்றது நீ ஓடுகின்றாய்! குறவன் கனவில் அவன் துரத்துகின்றான் பாம்பு ஓடுகின்றது” என்று ஆம் கனவுகள் எல்லாம் அவரவர் நினைவுகளைப் பொறுத்ததே. கனவுகளுக்கு பலன் சொல்பவர்களும் உண்டு.
பகலில் காணும் கனவுகளுக்கு பலன் உண்டா?
பகலில் காணும் கனவுக்கு பலனில்லை.
கனவுகளுக்கான பலன்கள் Kanavu Palangal
கனவில் வெண்ணிறப் பாம்பு கடித்தால்
வெண்ணிறப் பாம்பு கடித்தல், தேள் கடித்தல் சமுத்திரம் தாண்டல், நெருப்பில் அகப்படுதல், கட்டுப்படல் இவைகளை கண்டால் தனலாபம் உண்டு.
இறந்தவர்களை கனவில் கண்டால்
இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.
ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம்.
வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை.
- கனவில் மலத்தைக் கண்டால் பணவரவாம்.
- மாங்கல்யத்தைக்கண்டால் துன்பம் சூழுமாம்.
- பல்லி விழுந்தாலும் பலன் சொல்வார்கள்.
- உடலின் மேல் பாம்பு ஊர்ந்து செல்வது நல்லது. சங்க காலத்தில் வாழ்ந்த வேடுவர்கள் இதனை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தனர்.
சில கனவுகளுக்கான பலன்கள்:
- குழந்தையைக் கனவில் காண்பது நல்லது. தொழில் விருத்தி ஏற்படும். பொருள் வரவு அதிகமாகும்.
- ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் விளையாடுவது போலவோ, சிரித்து மகிழ்வது போலவோ கனவு கண்டால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலைக்கும்.
- சூரியனைக் கண்டால் வியாதிகள் நீங்கும். விரோதிகளை வெல்லும் ஆற்றல் கிட்டும்.
- கோயிலைக் கண்டால் நூதனமான தொழில் விருத்தியாகும். செல்வம் குவியப்போவதைக் குறிக்கும்.
- வெல்லத்தைச் சாப்பிடுவதாக கனவு கண்டால் வறுமை நீங்கும்.
- பலருடன் சேர்ந்து சாப்பிடுவதாக கனவு கண்டால் பொருள் லாபம் உண்டாகும்.
- பழங்களை ஒருவர் தனக்கு கொடுப்பதாகவோ, உண்பதாகவோ கனவு கண்டால் செய்யும் காரியம் வெற்றியாகும்.
- குருவிகளைக் கனவில் காண்பது நன்மையானது. கஷ்டமான நிலை விலகும். வம்புவழக்கு இருப்பின் வெற்றி கிட்டும். நோயுற்றிருப்பின் நோய் அகலும்.
- குருவி தன் வீட்டில் கூடு கட்டுவதாகக் கண்டால் திருமணமாகாதவருக்கு திருமணமும் திருமணமாகியிருந்தால் புத்திர பாக்கியமும் உண்டாகும்.
- குருவிகள் கூட்டைப் பார்த்தால்கூட, இந்தப் பலன் உண்டு.
- ஆனால் குருவிக் கூட்டைத் தானே பிரிப்பதாய் கண்டால் துயரமிகுந்த சம்பவம் நடக்க இருக்கிறது என்பதை அறியலாம்.
- குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவது போலவும் தன் குடும்பத்துடன் இருப்பதையும் கண்டால் வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும்.
- குருவிகள் குதூகலமாய் இருப்பதைக் காண்பதும் நல்லதே. ஆனால் குருவிகள் சண்டை போடுவதைப் போல கண்டால் குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட்டு பிரிய நேரும். தொழிலும் பகை ஏற்பட்டு ஜீவனக் கேடு உண்டாகும்.
- குருவிகள் இறந்து கிடப்பதைக் கண்டால்கூட கெடுபலன். பல தொல்லைகள் உண்டாகும்.
- அடுப்பு சுவாலையுடன் எரிந்து கொண்டிருப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கி இலாபம் பெற நேரும்.
- அடுப்பு எரியாமல் அதனுள் பூனையோ அதன் குட்டிகளோ இருப்பதாகக் காண நேரின் ஆரோக்கியக் கேடும், செய்தொழிலில் நஷ்டமும் உண்டாகும்.
- எரியும் அடுப்பு அணைத்து அதன் கரியையோ சாம்பலையோ காணநேரின் எதிர்பாராத நஷ்டம் ஏற்பட்டு அதனால் துன்புறப் போவதை உணர்த்தும்.
- அழுக்கு ஆடை அணிந்திருப்பதாகக் கண்டால் பலவித சங்கடங்கள் நேர இருக்கின்றன என அறியலாம்.
- வெண்பட்டு ஆடை உடுத்தியிருப்பதாகக் காண நேரின் பெண்களின் சேர்க்கையும் அதனால், இலாபமும் நேரும்.
- தன்னை யாரோ ஏமாற்றிவிட்டதாகக் கண்டால் வஞ்சகத்தால் தன்னிடமுள்ள பொருள் பறிபோகப் போகிறது என்பதை அறியலாம்.
- ஒரு நூதமான இயந்திரத்தைக் கண்டால், தான் மேற்கொள்ளப் போகும் செயலால் வெற்றியும் இலாபமும் ஏற்படும்.
- அந்த இயந்திரத்தைத் தானே இயக்குவதாய்க் காண நேரின், செய்யப்போகும் தொழிலில் நிச்சயம் அபிவிருத்தியும் இலாபமும் மிகும். அந்த இயந்திரம் இயங்கிக் கொண்டிருப்பதாகக் கண்டால் தான் நினைக்கும் காரியத்தைச் செய்வதால் நன்மை பெறலாம்.
- ஆனால் இயந்திரம் ஓடிக்கொண்டே இருந்து நின்று போவதாகக் கண்டால், செய்யும் தொழில்கூட பாழ்படப் போகிறது என்பதை அறியலாம்.
- ஆண் பெண் கலந்த கூட்டத்தைக் கண்டால் செய்தொழிலில் விருத்தி உண்டாகும்.
- நீர்க்குமிழியைக் கண்டால் சிறு சிறு நஷ்டங்கள் ஏற்படும். பிறர் தன் மீது வீண்பழி சுமத்துவர்.
- எலுமிச்ச மரத்தைக் காண்பது நல்லது. அதில் பழங்கள் மிகுந்து தொங்குவதாகக் காணப்பட்டால் உடனடியாக எதிர்பாராத பணவரவு ஏற்படும்.
- அதுவே பழமாக இல்லாது காயாக இருப்பின் பண வரவு ஏற்படும். ஆனால் மிகவும் தாமதமாய்க் கிடைக்கக்கூடும்.
- எலுமிச்ச மரம் உலர்ந்து போய் விட்டதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும்.
- தெளிந்த நீரைக்காணின் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கப் போவதையும், நல்ல காலம் தொடங்குகிறது என்பதையும் அறியலாம்
- பேனா அல்லது எழுதுகோல் எதையேனும் கண்டால் கடிதம் மூலமாக பொருள் வரவு ஏற்படும்.
- அரண்மனையைக் கண்டால் பொருள் விருத்தியாகும். அரண்மனைக்குள் தாமே செல்வதாய்க் கான நேரின், உற்றார் உறவினர்களால் சந்தோஷம் மிகுதியாகும். செல்வ நிலையும் உயரும்.
- வயதில் மூத்தவர்கள் தன்னை ஆசீர்வாதம் செய்வது போன்று கனவு கண்டால் ஜீவன மேன்மையும் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.
- எலுமிச்சம்பழத்தைக் காண்பது நல்லது. தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி, சகல பாக்கியங்களும் பெருகும்.
- அப்பழத்தைச் சாப்பிடுவதாகக் கண்டால் நல்ல தன்று. குடும்பத்தில் ஏதோ ஓர் அசம்பாவிதம் நேரப் போவதைக் குறிக்கும். காய்ச்சல், நோய் ஏற்படும்.
- காதுகளைக் கண்டால் குடும்பத்தில் கலகம் ஏற்பட்டு அதனால் கஷ்டம் நேரும்.
- தனக்கு காதுநோய் வந்துவிட்டதாகக் கண்டால் கூட குடும்பத்தில் ஏற்படப் போகும் கலகத்தின் அறிகுறியே ஆகும்.
- சாவிக் கொத்து தன்னிடம் இருப்பதாகக் கண்டால் குடும்பத்தில் பற்று அதிகமாகும். தொழிலில் மேன்மை, பொருள் சேர்க்கை மிகும்.
- சாவிக் கொத்து காணாமல் போனதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும். நம்பிக்கை மோசம் போவார்.
- ஒரு கதவையோ பூட்டையோ திறப்பதாகக் கண்டால் பிறருக்கு உதவுவதன் மூலமாகப் புகழ் பெறுவர்
உண்மை - கனவில் யானை வந்தால் அரசாங்க உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக நடந்து வந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்கும்.
- யானை மாலை போடுவது போல் கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும். பிரிந்த கணவன் மனைவி இடையே உறவு ஏற்படும். இளம் தலைமுறையாக இருந்தால் திருமணம் நடக்கும்.
- கனவில் யானையைப் பார்ப்பது செல்வவளத்துக்கும் அறிகுறியே.
- கனவுகளுக்கான பலன்கள் பழமையான சாஸ்திரங்களில் மட்டுமே உள்ளது.
கனவின் பலன் கிடைக்கும் காலம் – காணும் நேரத்தின் அடிப்படையில்
- நள்ளிரவில் ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும்.
- இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்தில் பலன் கிடைக்கும்,
- அதிகாலை கனவு உடனடியாக பலிக்கும் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது.
நமது ஆழ்மனதில் புதைந்துள்ள நிறைவேறாத ஆசைகள், மூளையில் பதிவான சமீபத்திய நிகழ்வுகள்தான் தூக்கத்தில் கனவுகளாக வருகின்றன. இதற்கு பலன்களாக நாம் எடுத்துக்கொள்பவை, நம்மால் ஏற்படுத்தபட்டவைதான்.