
நடிகர் சிம்புவின் தம்பியும், டி.ராஜேந்திரனின் மகனுமான குரலரசனுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால், சிம்பு பெரியப்பா ஆகியுள்ளார்.
குரலரசனுக்கு குழந்தை பிறந்தது..
நடிகரும் இயக்குநரும் பாடகருமான டி.ராஜேந்திரனுக்கு சிம்பு, குரலரசன் மற்றும் இலக்கியா என மூன்று பிள்ளைகள் உள்ளனர். குரலரசன், தனது தந்தை மற்றும் அண்ணனுடன் சிறு வயதில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக மட்டும் சில படங்களில் நடித்திருந்த இவர், வளர்ந்த பிறகு வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அதன் பிறகு ஒரு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
குரலரசன், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி நபீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதற்காக அவர் சென்னையில் உள்ள ஒரு பிரபல மசூதியில் மதம் மாறினார். இவரது இந்த மதமாற்ற திருமணம், அப்போது பெரிதாக பேசப்பட்டது. குரலரசனின் மனைவி நபீலா தற்போது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாயும் சேயும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உடன்பிறந்த இருவருக்கும் குழந்தை பிறந்தது…
சிம்புவின் தங்கை இலக்கியாவிற்கும் 2014ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. இவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தற்போது குரலரசனுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, தங்கை மகனுக்கு மாமாவாகவும், தம்பியின் மகனுக்கு பெரியப்பாவாகவும் வலம் வருகிறார், சிம்பு.
சிம்புவின் திருமணம் எப்போது?
தமிழ் திரையுலகில் உள்ள நடிகர்களுள் 40களை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவர்களுள் ஒருவர், சிலம்பரசன். சில நடிகைகளை காதலித்து டேட்டிங் செய்த இவர், சில வருடங்களுக்கு முன்னர் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். பின்னர் இளைத்து, தமிழ் திரையுலகிற்குள் கம்-பேக் கொடுத்தார். வருடா வருடம், இவரது திருமணம் குறித்த வதந்திகள் அவ்வப்போது பரவிய வண்ணம் உள்ளன. சில வருடங்களுக்கு முன்னர், தனக்கு அழகான பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், சமீபத்தில் கொடுத்த நேர்காணலில், “பெண்ணாக இருந்தால் போதும்” என்று கூறினார்.
சிம்பு, நிதி அகர்வாலை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவரும், சிம்புவும் ‘ஈஸ்வரன்’ என்ற படத்தில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். இவர்கள் சமீபத்தில் ஒன்றாக வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர்கள் காதலிப்பது குறித்த கிசுகிசு இன்னும் கிசுகிசுவாகவே உள்ளது. இது குறித்து இருவரும் இதுவரை வாய்திறக்காமல் உள்ளனர். அதனால் சிம்புவின் திருமணம் குறித்த செய்தி வருவதற்கு இன்னும் சில வருடங்கள் பிடிக்கலாம் என கூறப்படுகிறது.



