கேன்சர் ஒருவருக்கு வரும் போது மரணம் நிச்சயம் என்ற கருத்து சமூகத்தில் உள்ளது. ஆனால் உண்மை நிலையோ வேறு. இன்று 50 சதவிகித புற்றுநோயாளிகள் முற்றிலும் குணப்படுத்தப்படுகிறார்கள். மேலும் 25 சதவிகித புற்றுநோயாளிக்கும் ஆயுட்காலத்தை அதிகரிக்க முடிகிறது. நமது உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆக்கப்பட்டவை. வீடு பல ஆயிரம் செங்கலால் கட்டப்பட்டதுபோல நமது உடல் பல கோடிக்கணக்கான செல்களால் ஆனது.
இந்த செல்கள் வளரும் மற்றும் அழியும் தன்மையும் உடையது. இதுவே செல் சைக்கிள் என்று அழைக்கப்படுகிறது. சில காரணிகள் செல்லை தாக்கும் போது செல் அழியாமல் வளர்ந்து கொண்டே ஒரு கட்டியாக மாறுவதே கேன்சர் என்று அழைக்கப்படுகிறது. உடலில் எந்த உறுப்பினிலும் கேன்சர் வரலாம். உடலில் முடி, பல் மற்றும் நகம் தவிர மற்ற எந்த உறுப்பிலும் வரலாம்.
புற்று நோய்க்கான பொதுவான அறிகுறிகள் என்ன?
பசியின்மை, எடை குறைதல், சோர்வு, ரத்த சோகை போன்றவை பொதுவான அறிகுறிகள். இதுதவிர, எந்த இடத்தில் புற்றுநோய் வருகிறதோ அந்த இடத்துக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட அறிகுறிகள் தென்படுவதுண்டு.
உணவுக்குழாய் புற்றுநோய்:
- நீர் மற்றும் உணவு விழுங்குவதில் சிரமம்;
- தீராத முதுகு வலி;
- பசியின்மை;
- ரத்த சோகை.
இரைப்பை புற்று:
- வயிற்றுப் பொருமல்;
- வயிற்றின் மேல் பாகத்தில் வலி;
- ரத்த வாந்தி;
- சாப்பிட்ட பல மணி நேரம் கழித்து ஜீரணம் ஆகாமல் வாந்தி எடுத்தல்.
சிறுகுடல் புற்றுநோய்:
- வயிற்று வலி;
- வயிற்றில் வீக்கம்;
- தீராத வாந்தி;
- வயிற்றுப் பொருமல்.
பெருங்குடல் புற்றுநோய்:
- ரத்த சோகை;
- மலத்தில் ரத்தம்;
- வயிற்று வலி;
- வயிறு வீக்கம்.
கல்லீரல் புற்று:
- வயிற்றின் மேல் பாகத்தில் வலி;
- மஞ்சள் காமாலை;
- கல்லீரல் வீக்கம்;
- வயிறு வீக்கம்.
கணையப் புற்று:
- தீராத வயிற்று வலி;
- வயிற்றில் பொருமல்;
- முதுகு வலி,
- திடீரென சர்க்கரை வியாதி வருதல்.
உணவு விழுங்குவதில் சிரமம், வயிற்றில் கட்டி, ரத்த வாந்தி, மலத்தில் ரத்தம், தீவிர எடை குறைதல், மஞ்சள் காமாலை, பசியின்மை ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரிடம் சென்று தக்க ஆலோசனை பெறவேண்டும்.
உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..
அறிகுறிகள் மற்றும் உடல் பிரச்சினைகளின் அடிப்படையில் முழு உடல் பரிசோதனை செய்வது மிக முக்கியம். அறிகுறிகள் கொண்டு எந்தப் பாகத்தில் புற்றுநோய் உள்ளது என கணித்து அதற்குரிய பரிசோதனை செய்தால் புற்றுநோய் எந்த நிலையில் உள்ளது; எவ்வளவு தூரம் பரவி உள்ளது. எந்த சிகிச்சை முறையை கையாண்டால் பலன் கிட்டும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்


