பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார்? கம்மு vs பாரு – ரசிகர்கள் கணிப்புகள் தீவிரம்
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இந்த சீசனின் டைட்டில் வின்னரும் ரன்னர் அப்பும் யார் என்பதைக் குறித்து ரசிகர்கள் இப்போதே தங்களது கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக கமருதீன் என்கிற கம்மு மற்றும் விஜே பார்வதி என்கிற பாரு ஆகிய இருவரும் தான் கிராண்ட் ஃபினாலே வரை செல்லப்போகிறார்கள் என பலரும் உறுதியாக நம்பத் தொடங்கியுள்ளனர்.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசனில், ஆரம்பத்திலிருந்தே சில போட்டியாளர்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தாலும், கம்மு மற்றும் பாரு மீது மட்டும் எந்த விதமான ரெட் கார்டு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதும் ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் காரணமாகவே, விஜய் டிவியும் பிக் பாஸ் குழுவும் இவர்களை கடைசி வரை கொண்டு செல்ல முடிவு செய்துவிட்டதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
லவ் கன்டென்ட், முக்கோண காதல், பக்கா டிராமா

டிவி சீரியல்களில் கள்ளக் காதல் கதைகள் அதிகம் இருக்கும் என்று விவேக் தனது காமெடி காட்சிகளில் சொல்லியிருப்பார். ஆனால், பிக் பாஸ் சீசன் 9ல் அதையே முழுமையாக நடைமுறைப்படுத்தியதாக பலர் விமர்சிக்கின்றனர். இந்த சீசனில் காதல், முக்கோண உறவுகள், உணர்ச்சி நாடகங்கள் என வெறும் லவ் கன்டென்ட்டை மையமாக வைத்து நிகழ்ச்சியை ஓட்ட முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஆதிரை தொடர்பான சர்ச்சை விவகாரத்தில், அவரை முதலில் எலிமினேட் செய்து பின்னர் வைல்ட் கார்டாக மீண்டும் கொண்டு வந்து மறுபடியும் வெளியேற்றிய நிகழ்வுகள் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தன. ஆனால், அதே நேரத்தில் கம்மு மற்றும் பாரு இருவரும் எந்த பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து வீட்டில் நிலைத்திருப்பது, திட்டமிட்ட கேம் என்கிற சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
பிக் பாஸ் டைட்டில் வின்னர் கம்மு தான்?
பல ரசிகர்கள் இப்போது வெளிப்படையாகவே, இந்த சீசனின் பிக் பாஸ் டைட்டில் வின்னர் கமருதீன் தான் என இப்போதே எழுதிவைத்துக் கொள்ளலாம் என்று கூற ஆரம்பித்துவிட்டனர். அந்த அளவிற்கு நிகழ்ச்சியின் போக்கு கம்முவுக்கு சாதகமாக நகர்ந்து வருவதாக விமர்சனங்கள் எழுகின்றன. கடந்த சீசன்களில் ஆரி மற்றும் பாலாஜி முருகதாஸ் இடையே ஏற்பட்ட கடும் மோதல்கள் எவ்வாறு டைட்டில் வின்னர் மற்றும் ரன்னர் அப் இடங்களை தீர்மானித்ததோ, அதே மாதிரியான பக்கா டிராமா தற்போது கம்மு மற்றும் பாரு இடையே உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கடைசி நேரத்தில் நடக்கும் இந்த சண்டைகள், வாக்குவாதங்கள் எல்லாமே கிராண்ட் ஃபினாலேவுக்கான ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட காட்சிகள் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதன் மூலம் கம்முவை வெற்றியாளராக முன்னிலைப்படுத்த முயற்சி நடைபெறுகிறது எனவும் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
ரன்னர் அப் பாரு என்கிற கணிப்பு
பிக் பாஸ் வீட்டில் விஜே பார்வதி இத்தனை நாட்கள் நீடித்ததே ஆச்சர்யம் என சிலர் கூறினாலும், அவரது ரசிகர்கள் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை நடத்துவது பாரு தான் என பெருமையாக பதிவிட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் கம்முவுடன் நெருக்கமாக இருந்து வந்த பாரு, ஃபேமிலி ரவுண்டுக்குப் பிறகு தனது கேமைக் முழுமையாக மாற்றியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கம்முவை நேரடியாக நாமினேட் செய்தது, பேட் டச் சர்ச்சை உள்ளிட்ட விவகாரங்களில் தைரியமாக கருத்து தெரிவித்தது போன்றவை, பாருவின் கேம் பிளானின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அவர் ரன்னர் அப் இடத்தை உறுதி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் எனவும், இருவரும் திட்டமிட்டே கிராண்ட் ஃபினாலேவை நோக்கி பயணிக்கிறார்கள் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பிக் பாஸ் சீசன் 9 இப்போது காதல், ஆக்ஷன், டிராமா என உலகமகா நடிப்புடன் கிளைமாக்ஸை நோக்கி நகர்கிறது. இந்த வாரம் என்ன நடக்கப்போகிறது, ரசிகர்களின் கணிப்புகள் உண்மையாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
குறிப்பு: இந்த கட்டுரை ரசிகர்களின் கருத்துகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இது எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அல்ல.



