நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தில் வேலைப் பார்த்த டீம் தற்போது ‘கங்குவா’ படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ படம் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். சிறுத்த சிவா இயக்கும் இந்தப் படம் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட கதையாக உருவாகி வருகிறது. பத்து மொழிகளில் 3டியில் இந்தப் படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் பாலிவுட் நாயகி திஷா பதானி சூர்யா ஜோடியாக நடிக்கிறார்.
கோவா, கொடைக்கானல், சென்னை ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்தது. இந்த நிலையில்தான், தனக்கான போர்ஷன் முடிந்துவிட்டதாக சூர்யா கையில் வாளேந்திய ‘கங்குவா’ ஸ்டிலுடன் அறிவித்து இருந்தார். மேலும், இந்தப் படம் தனக்கு எப்போதும் ஸ்பெஷல் எனவும் அறிவித்து இருந்தார் சூர்யா. இந்தப் படத்தில் தனது போர்ஷன் நிறைவடைகிறது என்பதால் சில நாட்களுக்கு முன்பு படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் நடிகர் சூர்யா.
வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் கதை என்பதால் இதில் விஎஃப்எக்ஸ் காட்சிகள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை. அதனால், ‘அயலான்’ படத்திற்கு விஎஃப்எக்ஸ் செய்த பிஜோயின் குழுதான் ‘கங்குவா’ படத்திலும் இணைந்திருக்கிறது. ’அயலான்’ படத்தில் இதன் விஎஃப்எக்ஸ் பணிகள் அனைவராலும் பாராட்டப்பட்டது. இதனால், ‘கங்குவா’ படத்திலும் சிறப்பான காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இரண்டாம் பார்வை போஸ்டரிலும் சூர்யா வரலாற்றுக் காலம் மற்றும் தற்போதைய லுக் என இருவேறு தோற்றங்களில் இருந்தது ரசிகர்களைக் கவர்ந்தது. டீசர், டிரைய்லர், பாடல்கள் என விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும்.



