2018-ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் மும்பையில் இன்று பிரமாண்டமான துவக்க விழாவுடன் ஆரம்பமாகின்றன. இன்றைய துவக்க விழாவில் இந்தி நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், வருண் தவான், நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா ஆகியோர் நடனமாட உள்ளார்கள். இதற்காக கடந்த சில நாட்களாக அவர்கள் ரிகர்சலில் ஈடுபட்டு வருகிறார்கள். தமன்னாவிற்கு இந்த விழாவில் 10 நிமிடம் மட்டும் நடனமாடுவதற்காக சுமார் 50 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
ஐபிஎல் துவக்க விழாவில் நடனமாடுவது பற்றி தமன்னா கூறுகையில், “ஐபிஎல் துவக்க விழாவில் நடனமாடுவதற்கு நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். மும்பை, சென்னை, ஐதராபாத் ஆகியவற்றை எனது சொந்த ஊர் போல நினைப்பேன். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் பாடல்களுக்கு நான் நடனமாட உள்ளேன்.
நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகை. இரண்டு வருடங்கள் கழித்து அந்த அணி வருகிறது. நான் தோனியின் மிகப்பெரிய ரசிகை. அவர்கள் விளையாடுவதைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இன்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் – மும்பை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிகளைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் வெறித்தன வெய்ட்டிங்கில் இருக்கிறார்கள்.


