காமராஜர் வாழ்க்கை வரலாறை காமராஜ் பெயரில் திரைப்படமாக இயக்கியவர் அ.பாலகிருஷ்ணன். அடுத்து எம்ஜிஆர் வாழ்க்கை சரித்திர படத்தை தயாரித்து இயக்குகிறார். இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இதுபற்றி இயக்குனர் கூறியது: ஆணையடி பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார் எம்ஜிஆர். வறுமையால் அவரது கல்வி தடைபட்டதையடுத்து நாடக கம்பெனியில் சேரும் நிலை ஏற்பட்டது. அந்த நாடக கம்பெனி முதலாளி எம்ஜிஆரின் சிறுவயது தோற்றத்தை கண்டு, ‘சிறுவன் தங்க விக்ரகம் போல் இருக்கிறான்’ என கூறினாராம்.
எனவே எம்ஜிஆரின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு நடத்தி அத்வைத் என்ற சிறுவன் தேர்வு செய்யப்பட்டு எம்ஜிஆரின் பால்யகால வேடத்தில் நடிக்கிறான். எம்ஜிஆரை போன்றே தோற்றம் கொண்ட நடிகர் சதீஷ்குமார், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எம்ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துலுவாக ஒய்.ஜி.மகேந்திரன், சக்ரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், எம்ஜிஆர் உயிர் தொண்டனாக வையாபுரி நடிக்கின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் கதாபாத்திரங்களில் நடிக்க பொருத்தமான நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. விரைவில் தொடங்கவிருக்கும் அடுத்த கட்ட படப்பிடிப்பில் எம்ஜிஆர் மனைவி ஜானகியாக ரித்விகா நடிக்க உள்ளார். ஏ.எம்.எட்வின் ஒளிப்பதிவு செய்கிறார். திரைக்கதை, வசனத்தை செம்பூர் ஜெயராஜ் எழுதுகிறார். எஸ்.பி.அகமதி எடிட்டிங் செய்கிறார். இவ்வாறு இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறினார்



