
அட்ச திருதியை நாளான இன்று தங்கம் வாங்க மக்கள் பலர் ஆர்வம் காட்டி வரும் நிலையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.அட்சய திருதியை நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரம் ரூபாயைக் கடந்தது.
தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிக ஏற்றத்தோடு காணப்படுகிறது. கடந்த மாதம் இதுவரை இல்லாத வகையில், தங்கம் விலை ஒரு சவரன் 55 ஆயிரம் ரூபாயை கடந்தது.
இந்த நிலையில், 6 ஆயிரத்து 615 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை, 45 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியையொட்டி காலை முதலே நகைக் கடைகளுக்கு பொதுமக்கள் படையெடுத்துச் சென்ற நிலையில், தங்கம் விலை உயர்வால் ஏமாற்றமடைந்தனர்.
வெள்ளி விலை, கிராமுக்கு ஒரு ரூபாய் 30 காசுகள் விலை உயர்ந்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலையும் ஆயிரத்து 300 ரூபாய் உயர்ந்து 90 ஆயிரத்தை எட்டியது.