டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான கட்டணங்களை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 1-ந்தேதி முதல் படதயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்தனர். இதனால் பல புதிய படங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த போராட்டம் தொடரும் என்று தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், ‘கடந்த ஒரு மாத காலமாக நமது திரைத்துறையின் நலன் கருதி தமிழ், தெலுங்கு, மலையாள, மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து டிஜிட்டல் சர்வீஸ் புரோவைடர் (digital service provider)-க்கு எதிராக மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதில்லை என்று முடிவு எடுத்து நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று 5.3.2018 ஐதராபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜாயிண்ட் ஆக்ஷன் கமிட்டி (Joint Action Committee) சார்பில் ஏற்கனவே digital service providers க்கு வைத்த கோரிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். நாம் எதிர்பார்த்த அளவில் சுமூக உடன்படிக்கை ஏற்படாத காரணத்தினாலும், தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் நமது தயாரிப்பாளர்களுக்கு இந்த பிரச்சினையில் எந்த வித ஒத்துழைப்பும் அளிப்பதில்லை என்ற முடிவினை எடுத்ததாலும், நமது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பான புதிய படங்கள் வெளியிடுவதில்லை என்ற முடிவு தொடரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.