தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷல் என்னவென்றால் வெல்லம் மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான். இந்த சர்க்கரை பொங்கலை இன்னும் பலருக்கு சுவையாக செய்யத் தெரியாது.
ஆகவே தான் நாங்கள் உங்களுக்காக, சர்க்கரை பொங்கலை எப்படி சுவையாக செய்வதென்று ஈஸியான செய்முறையைக் கொடுத்திருக்கின்றோம். அதைப் படித்து அவற்றை பொங்கல் பண்டிகையன்று செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1/2 கப்
பாசிப்பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 3/4 கப் (நன்கு பொடியாக தட்டியது)
தண்ணீர் – 4 கப்
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை – 12-15
முந்திரி – 8-10
ஏலக்காய் – 2 (தட்டியது)
கிராம்பு – 2 (தட்டியது)
சூடம் – 1 சிட்டிகை (விருப்பமானால்)
செய்முறை:
முதலில் அரிசியை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பாசிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின் அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியைப் போட்டு, குக்கரை மூடி, முதலில் அதிகப்படியான நெருப்பில் வைத்து 1 விசில் விட்டு, பின் தீயை குறைவில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
அதே சமயத்தில், மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைப் போட்டு கரைய வைக்க வேண்டும். வெல்லமானது நன்கு கரைந்ததும், அதனை வடித்துக் கொள்ள வேண்டும்.
பின் குக்கரை திறந்து அதில் வெல்லப் பாகுவை ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து, ஏலக்காய், கிராம்பு மற்றும் சூடத்தை சேர்த்து, பொங்கலை 3-4 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பிறகு ஒரு சிறு வாணலியில் மீதமுள்ள அனைத்து நெய்யையும் ஊற்றி உருகியதும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து, பின் அதனை குக்கரில் உள்ள பொங்கலில் ஊற்றி, நன்கு கிளறி இறக்கினால், சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி!!!