சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்பது என்ன? சர்க்கரைக்கும் சர்க்கரை நோய்க்கும் என்ன தொடர்பு? மாவுச்சத்துள்ள உணவுப் பொருட்களை சேர்த்துக்கொண்டாலும் சர்க்கரை கூடுமா? வாழ்க்கை முறையில் மேற்கொள்ளும் சில மாற்றங்களின் மூலமாகவே எவ்வாறு சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதை பார்க்கலாம்.
சர்க்கரை நோய் / நீரிழிவு நோய் என்றால் என்ன?
நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் மாவுப்பொருள், கொழுப்பு, புரதம் ஆகியவை இருப்பது தெரிந்தவிடயமே… மாவுப் பொருளைப் பொருத்தவரையில், உடலில் சீரணிக்கப்பட்ட பிறகு அது சர்க்கரையாக மாறி இரத்ததில் சேரும். நமது உடல் அதை உபயோகிக்க வேண்டுமென்றால், நமது உடலில் இன்சுலின் சுரக்க வேண்டும். இன்சுலின் இருந்தும் அது உபயோகிக்கப்படவில்லை என்றாலோ, நம் உடலில் இன்சுலின் குறைவாக சுரந்தாலோ, இரத்ததில் சர்க்கரை தேங்கி நிற்கும். அதுதான் சர்க்கரை நோய்.
வகைகள்
டைப் 1 சர்க்கரைநோய்
சிறு வயதிலேயே ஏற்படும் இவ்வகையில், கணையத்தால் இன்சுலினைச் சுரக்க முடிவதில்லை. எனவே, உடலுக்குத் தேவையான இன்சுலினை வெளியே இருந்து உடலுக்குள் செலுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் மாத்திரைகளுடன் ஊசி மருந்தும் கட்டாயமாக்கப்படும். இவ்வகை சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குறைவான எடையுள்ளவர்களாக இருப்பார்கள்.
பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகையில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும், மிக மெதுவாகத்தான் தன் பணியைச் செய்யும். எனவேதான் மாத்திரைகளுடன் உடற்பயிற்சி செய்யவேண்டியிருக்கும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். இந்த வகை டயபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக உடல் எடையுடன் இருப்பார்கள்.
ஒரு நாளைக்கு எவ்வளவு மாவுப்பொருளை எடுத்துக்கொள்கிறோம்?
‘நான் காஃபி, டீ சர்க்கரை போடுவதில்லை, இனிப்பு சாப்பிடுவதில்லை’ என பலர் கூறி வருகின்றனர். அவ்வாறு காபி, டீயில் போடப்படும் சர்க்கரையும் உடலில் பெருமளவு சர்க்கரையை சேர்ப்பதில்லை. இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், சோறு, ரவை ஆகிய அனைத்திலும் சர்க்கரை இருக்கிறது.
நாம் காலையிலிருந்து இரவு வரை உண்ணும் உணவில் 50%தான் மாவுப்பொருள் இருக்க வேண்டும் என்ற ஒரு விதி இருக்கிறது. ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது?. காலையில் இட்லி தோசை, மதியம் சாதம், இரவு சப்பாத்தி என கணக்கிட்டால் மொத்தம் 85 – 90 % மாவுப் பொருட்களையே உணவாக எடுத்துக் கொள்கிறோம்.
உணவின் மாற்றம்
- காலையில் இரண்டு முட்டை, ஒரு கோப்பை பால். அல்லது பயிர்வகைகளில் ஏதாவது சாப்பிட்டுக் கொள்ளலாம். ஒரு கோப்பை பழவகைகள் அல்லது கட்டித் தயிர் ஒரு கோப்பை சாப்பிடலாம்.
- மதிய உணவிற்கு கீரை, காய்கறி, தயிர், போன்றவையே எடுத்துக் கொள்ள வேண்டும். வேண்டுமென்றால் ஓரத்தில் ஒரு தேக்கரண்டி சோறு வைத்துக் கொள்ளவும்.
- முட்டைக் கோஸ் பொறியல், எண்ணெய் கத்தரிக்காய், தயிர் போன்றவை மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். முடியாது என நினைக்காமல், முயன்றால் இவ்வுணவிற்கு பழகி விடலாம்.
- இரவுக்கு சுண்டல், பச்சைபட்டாணி, பட்டர் பீன்ஸ், பன்னீர், காளான் என நாமே திட்டமிட்டு உண்ண வேண்டும். தோசை, சப்பாத்தி எடுக்கக் கூடாது. அசைவம் சாப்பிட வேண்டுமெனில் அதுவும் எடுத்துக் கொள்ளலாம்.
- கோழி சாப்பிடவேண்டும் என விரும்பினால், கோழி வாங்கி வெங்காயம் போட்டு சமைத்து சாப்பிடலாம். ஆனால் சோறு போட்டு சாப்பிடக் கூடாது.
- அசைவ உணவு சாப்பிடுகிறோம் என சொல்லிக் கொண்டு ஒரு 100 கிராம் சிக்கன் சாப்பிட்டால், அரைக்கிலோ சாதம் / பிரியாணி சேர்ப்பது மிகத் தவறாகும். வாரத்திற்கு இருமுறை சாதம் இல்லாமல் அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
- இடையில் பசித்தால், வெள்ளரிப் பிஞ்சு கேரட், தேங்காய், உலர் பழங்கள், போன்றவை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பிஸ்கட், ரஸ்க், சிப்ஸ் போன்றவை எடுத்துக் கொள்ளக்கூடாது.
- சமைப்பதற்கு நெய், எண்ணெய் எதுவேண்டுமானாலும் உபயோகிக்கலாம். அது போதுமான கொழுப்புச் சத்தை கொடுக்கும். இதைத் தொடர்ந்தால் கண்டிப்பாக சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வந்து தீரும்.
மேலும் ரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சிறப்பு உணவுகள்…
பாகற்காய்
தினமும் உணவில் பாகற்காய் சேர்த்துக்கொண்டால், டயாபடீஸ் வராமல் தடுக்கும். இதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பாகற்காயில் இருக்கும் சாரன்டின் (Charantin) ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். இதிலுள்ள லெக்டின் (Lectin) பசியைக் கட்டுப்படுத்தி, உடலில் சேர்ந்திருக்கும் குளூக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
வெந்தயம்
வெந்தயத்தில் அதிக அளவில் எளிதாகக் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது, ஜீரணத்தின் வேகத்தைக் குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் அளவையும் குறைக்கும். எனவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
நெல்லி
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடியது. இதில் பாலிபீனால் (Polyphenol) சத்து நிறைந்து இருக்கிறது. இது, இன்சுலின் உறிஞ்சப்படுவதற்கு உதவி செய்கிறது. இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். தினமும் 2 நெல்லிக்காய் உட்கொண்டுவந்தால், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம்.’
கறிவேப்பிலை
இது இன்சுலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும். தினசரி 10 முழு கறிவேப்பிலை இலைகளைத் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் உண்டுவந்தால், பரம்பரை சர்க்கரைநோயையும், உடல்பருமனால் ஏற்படும் சர்க்கரைநோயையும் முழுவதுமாகத் தடுக்கலாம்.
கொய்யா
கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. இது மலச்சிக்கலை தடுத்து, டைப் – 2 சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும். கொய்யா இலைகளும் சத்து மிகுந்தவை. கொய்யா இலைகளைக் காயவைத்து, பொடியாக்கி, நீரில் கொதிக்கவைத்து குடித்துவர, சர்க்கரைநோய் வருவதைத் தடுக்கலாம்.
முருங்கை இலை
முருங்கை இலையில் அஸ்கார்பிக் ஆசிட் (Ascorbic acid) நிறைந்துள்ளது. இது, இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். உடலில் குளூக்கோஸ் அளவைச் சீராக்கி, இயற்கையான வழியில் டயாபடீஸை கட்டுப்படுத்தும்.
பட்டை
தினசரி 1-6 கிராம் பட்டைப் பொடியை 40 நாட்களுக்கு உட்கொண்டால், ரத்த சர்க்கரை அளவு 18-29 சதவிகிதம் குறையும். ஒவ்வாமை இருப்பவர்கள் மட்டும் இதைத் தவிர்க்கவும்.
பரம்பரை
பரம்பரையில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால், தலைமுறைப் பண்புகளைக் கொண்டு செல்லும் ஜீன்கள் டைப்-2 டயாபடீஸை உருவாக்கும். அதிகக் குழந்தைகளைப் பெற்ற பெண்கள், அவர்களின் வயதான காலத்தில் டைப்-2 டயாபடீஸால் பாதிக்கப்படுவார்கள்.